ஒற்றைத் தலைமை: இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே மூத்த தலைவர்கள் தூது
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்றும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் தற்போது இரட்டைத் தலைமை முறையை முடிவுக்குக் கொண்டு வந்து ஒற்றைத் தலைமையாக மீண்டும் பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவர எடப்பாடி கே. பழனிசாமி முயற்சித்து வருகிறார். ஓ. பன்னீர்செல்வம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். வரும் ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கடந்த 4, 5 நாள்களாக தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனை இன்றும் காலை முதல் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தம்பிதுரை, பிறகு ஓ. பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடத்திய பிறகு ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தம்பிதுரை மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்குச் செல்லவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவபதி, ஒற்றைத் தலைமைக்கு ஓ. பன்னீர்செல்வம் ஒப்புதல் தருவது அவருக்கு நல்லது எனத் தெரிவித்தார்.