இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்வு மேம்பட நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக உலக அகதிகள் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக உலக அகதிகள் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில்,
'ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20-ஆம் நாள் உலக அகதிகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்பதே தமிழர் வாழ்வியல் மரபு. உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றம் செய்து, அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்வுரிமை - குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.