அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு உள்ளதால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆவடி காவல் துறை ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவர் கையெழுத்திட்ட மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிமுக பொதுக்குழுவுக்கு காவல் துறை அனுமதி தரக் கூடாது. இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பாதுகாப்பு வழங்கக்கோரி அனுமதி கோரியுள்ளார்.
பெஞ்சமின் மனு தனிச்சையான விருப்பம் என்பதால் பாதுகாப்பு வழங்குவதற்கு காவல் துறை மறுப்பு தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கெனவே கடிதம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.