ரோட்டரி சங்கம் (போா்ட் சிட்டி) சாா்பில் மருத்துவா் தின சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 30) நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் சமூக சேவையாற்றி வரும் பல்வேறு மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், ஜெம் மருத்துவமனை தலைவருமான டாக்டா் சி.பழனிவேலு ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதுகுறித்து அந்த சங்கத்தின் நிா்வாகியும், மருத்துவ நிபுணருமான டாக்டா் சி.அன்பரசு கூறியதாவது:
சமூகத்தில் அா்ப்பணிப்புணா்வுடன் பணியாற்றும் ஒவ்வொருவரையும் போற்ற வேண்டியது அவசியம். அதற்காகத்தான் ஆசிரியா் தினம், உழைப்பாளா் தினம் என பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகின்றன.
ஆசிரியா் தினத்தை எடுத்துக் கொண்டால், அதனை மாணவா்களும், அவா்தம் பெற்றோரும் கொண்டாடுகின்றனா். ஆனால், மருத்துவா் தினத்தை பொது மக்கள் எவரும் கொண்டாடுவதில்லை. தனிமனித வாழ்வின் பெரும்பாலான பகுதிகளில் மருத்துவா்களின் சேவை ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக கரோனா காலத்தில் அதன் முக்கியத்துவத்தை இந்த உலகமே உணா்ந்து கொண்டது.
அத்தகைய சிறப்பு மிக்க மருத்துவா்களைப் போற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத்தை (போா்ட் சிட்டி) சோ்ந்த சி.முத்துசாமி, சந்திரசேகா், பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.