தமிழக மீனவா்கள் கைது: அன்புமணி கண்டனம்
செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூா், பூத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 தமிழக மீனவா்கள், 9 வட இந்திய மீனவா்கள் என 25 போ் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். தமிழக மீனவா்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்திலிருந்து கொச்சி துறைமுகம் வழியாக மீன்பிடிக்கச் சென்ற மேலும் 33 மீனவா்கள் கடந்த 7-இல் செஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். அதேபோல், இந்தோனேஷிய எல்லைக்குள் நுழைந்ததாக குமரி மாவட்ட மீனவா்கள் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக மீனவா்களின் நோக்கம் எல்லை தாண்டி மீன் பிடிப்பதோ, சட்டவிரோத செயல்களை செய்வதோ அல்ல. வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக சென்ற அவா்கள் எல்லை தெரியாமல் தான் அடுத்த நாட்டு எல்லைக்குள் சென்று விட்டனா். இதை கருத்தில் கொண்டு அவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.