'ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி'
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர்,
'தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டடக்கலை ஆகியவற்றின் விழுமியங்களின் சான்றாக, தொன்மையான திருக்கோயில்கள் தமிழகமெங்கும் விரவியுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைத்து, பார் போற்றும் வண்ணம் பணிகளை மேற்கொள்ள இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
இம்மதிப்பீடுகளில் இந்து சமய அறநிலையத் துறைக்கு 340.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
மேலும், அரசுப் பணியாளர்கள் நலன் குறித்து,
'தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதாரர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில், ஓய்வூதியதாரர்களின் மரணத்தின்போது, அவரின் குடும்பத்தினருக்கு 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்றினால், இத்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களின்எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை நேர் செய்ய, ஒரு சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாயை அரசு வழங்கும்.
கரோனா நோய்த்தொற்றால் பணியிடை மரணமடைந்த 327 முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 79.5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவும், ஓய்வூதியப் பயன்களை வழங்குவதற்காகவும், வரவு-செலவுத் திட்டத்தில் கூடுதலாக ஏறத்தாழ 19,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்' என்று அறிவித்தார்.