முகப்பு
தமிழ்நாடு

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கும்?

தமிழகத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 மார்ச் 2022, 3:29 pm IST
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கும்?
பகிர்:


தமிழகத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மகளிரின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில், அவர்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான ஆவின் பால் விலைக்குறைப்பு, சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் போன்ற பல வாக்குறுதிகளை தமிழக முதல்வர்  ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளார்.

Advertisement

அடுத்த முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்ற ஆட்சியினர் விட்டுச் சென்ற நிதி நெருக்கடிச் சூழல் காரணமாக, இந்த வாக்குறுதியை இந்த அரசின் முதல் ஆண்டில் செயல்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது.

இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுள்ள பயனாளிகளை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கண்டறிந்து, பயன்கள் அவர்களை சரியாகச் சென்றடையும் வகையில் திட்டத்தை வடிவமைப்பதற்கான பணிகள் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றன என்பதை இந்தப் பேரவைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதன் அடிப்படையில், இந்த அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும் போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கிறேன்.

உலகப்புகழ் பெற்ற நிபுணர்களைக் கொண்ட முதல்வரின்  பொருளாதார ஆலோசனைக் குழு, தமிழ்நாட்டின் நிதிநிலையை சீராக்குவதற்கு, இந்த  அரசிற்கு தக்க ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இந்த வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிப்பதிலும், அவர்கள் நேரம் ஒதுக்கி ஆலோசனைகள் வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆலோசனைகளை மனத்தில் கொண்டு தமிழ்நாட்டின் நிதிநிலையை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.