சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட முடியாது: ரியான் பராக்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரியான் பராக் பேட்டி குறித்து...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரியான் பராக் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட முடியாது எனக் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாறியதால், சிஎஸ்கேவில் இருந்த ரவீந்திர ஜடேஜாவும் சாம் கரணும் ராஜஸ்தான் அணிக்கு மாறினார்கள்.
முதல் ஐபிஎல் தொடரை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது. காயம் காரணமாக கடந்த சீசனில் கேப்டனாக இல்லாமல் இருந்த சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ரியான் பராக் தற்காலிக கேப்டனாக பணியாற்றினார்.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் இல்லாதபட்சத்தில் ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் இல்லாத நிலையில் இது குறித்து ரியான் பராக் கூறியிருப்பதாவது:
சஞ்சுவின் பேட்டிங் தனித்துவமானது. அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. இது ‘விராட் கோலிக்கு மாற்றுவீரர் யார்?’ எனக் கேட்பது போலிருக்கிறது. இதற்குப் பதில் - வாய்ப்பில்லை என்பதுதான். அனைவரும் வெற்றிபெறவே விளையாடுகிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியான ஆற்றல்களைப் பெற்றுள்ளார்கள்.
கடந்த சீசனை கவனித்திருந்தால், கடைசி கட்ட ஆட்டங்களில் தோல்வியுற்றோம். கூடுதல் சுதந்திரமாக விளையாடினோமா? அல்லது தேவையான இடங்களில் பவுண்டரிகள் அடித்தோமா? அதேமாதிரி எதிரணியினரை அந்த மாதிரியான நேரங்களில் சமாளித்தோமா? இதையெல்லாம் சரியாக செய்தால் ஐபிஎல் போட்டிகளில் முன்னேறுவோம். கடந்த கால தவறுகளை எல்லாம் இந்தமுறை சரிசெய்வோம்.
சுழல், வேகப் பந்துவீச்சாளர்கள் சரியான கலவையில் இருக்கிறார்கள். அதேமாதிரி பேட்டிங்கில் வலது, இடது கை பேட்டர்களும் சமநிலையில் இருக்கிறார்கள். ஜடேஜாவிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது; அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்.
எந்தத் திடலாக இருந்தாலுமே சிலர் ஓரணிக்கும் சிலர் இரு அணிக்கும் ஆதரவு தெரிவிப்பார்கள். எப்படியானாலும் இந்த கவனச்சிதறல்களைப் புறக்கணித்து எங்களது ஆட்டதில் கவனமாக இருப்போம். எங்கு விளையாடினாலும் எங்களது வலுவான செயல்பாடுகளைத் தருவோம் என்றார்.