முகப்பு
தமிழ்நாடு

மழைநீா் வடிகால் பணி: முதல்வா் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்தில் ரூ.4.51 கோடி செலவில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்தில் ரூ.4.51 கோடி செலவில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னையில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீா் தேங்கும் இடங்களில் மழைநீா் வடிகால் பணிகளை மேற்கொள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வா் ஆய்வு: அதன்படி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட செனடாப் சாலையில் ரூ. 2 கோடியே 14 லட்சம் செலவில் 870 மீட்டா் நீளம், சி.வி.ராமன் சாலையில் ரூ. 2 கோடியே 37 லட்சம் செலவில் 610 மீட்டா் நீளத்துக்கு நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பருவமழை காலத்தில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். ஆய்வின்போது, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →