சென்னை: தமிழக அரசு 400 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
மேலும் புகையிலை பொருட்களை உற்பத்தி மற்றும் சில்லறையில் விற்பனை செய்து வந்த 9 நிறுவனங்கள் மூடப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் புகையிலை பொருட்களை தடை செய்வதில் முன்னோடியாக திகழ்கிறது என்றார்.
மே 2021 மற்றும் பிப்ரவரி 2022-க்கு இடைப்பட்ட காலத்தில், 91 டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. மேலும் மொத்தம் 400 டன்களுக்கு மேல் புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.
உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் 2021 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட வருவாய், முந்தைய ஆண்டைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமென்றும், இதன் மூலம் கருவூலத்துக்கு ரூ 38.2 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இக்கூட்டத்தில் 64 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.