திருநெல்வேலி: பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவை விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், பாளையங்கோட்டையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டின் முன்பு சமையல் எரிவாயு உருளைகளுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கண்டன உரையாற்றினார்.
இதில், பெண்கள் சமையல் எரிவாயு உருளைகளுக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும், மணி அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் மாரியப்பன் முருகன் ராஜேந்திரன், பொருளாளர் ராஜேஷ் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் இதே போன்று சுத்தமல்லி, திருநெல்வேலி நகரம், தச்சநல்லூர், மானூர் உள்ளிட்ட இடங்களிலும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்