புதுச்சேரி திமுக இளைஞரணி அமைப்பாளரின் ராஜிநாமா அறிவிப்பால் பரபரப்பு
தனது பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாக மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனூஸ் திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி திமுகவில் தன்னையும், இஸ்லாமியர்களையும் புறக்கணிப்பதாகவும், மாநில அமைப்பாளர் சிவாவின் நடவடிக்கைகளை கண்டித்து தொழுகை முடித்து வந்த பின்பு தனது பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாக மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனூஸ் திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி சுல்தான்பேட்டை ஈத்கா பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க.. நாளை தொடங்குகிறது அனல் தகிக்கும் அக்னி நட்சத்திரம்
தொழுகை முடிந்து வெளியில் வந்த திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது அவர் புதுச்சேரியில் தான் வகித்து வந்த மாநில இளைஞரணி அமைப்பாளர் பதவியிலிருந்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாகவும், கனத்த இதயத்தோடு திமுகவிலிருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறினார்.
தற்போது மாநில அமைப்பாளராக உள்ள சிவா தன்னை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கி உள்ளார் என்றும், அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்பு இஸ்லாமிய மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டிய முகமது யூனுஸ், மாநில அமைப்பாளர் சிவாவை கண்டித்து கட்சியை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர் 1991 ஆம் ஆண்டு முதல் திமுகவில் கட்சி பணியாற்றி வந்ததாகவும், சுமார் 30 ஆண்டுகாலம் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் செயல்படி நடந்து கொண்டதாக தெரிவித்த அவர், 2012-ஆம் ஆண்டு முதல் மாநில இளைஞரணி அமைப்பாளராக பதவியேற்றேன் என்றும், தொடர்ந்து பணியாற்றுவதற்கு தனது பொருளாதாரத்தை இழந்து உள்ளதாகவும் தெரிவித்தார். தனது இளைஞர் அணி அமைப்பாளர் பதவி ராஜிநாமா கடிதத்தை திமுக தலைமைக்கு அனுப்பியுள்ளதாகவும், மேலும் தனது மக்கள் சேவை தொடரும் என்றும் அடுத்த கட்ட முடிவுகள் பற்றி ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முகமது யூனுஸ் தனது பேட்டியில் தெரிவித்தார்.