திருவண்ணாமலை கைதி மரணம் அடைந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கைப்படி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தையடுத்து, தானாக முன்வந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையைப் படித்தாா். அவா் கூறியது:
திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் வழக்குப் பதிந்து தங்கமணி என்பவரை கைது செய்தனா்.
கிளைச் சிறையில் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு வலிப்பு ஏற்பட்ட காரணத்தால் மரணம் அடைந்தாா். மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து, நீதித் துறை நடுவரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உயா் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, உடற்கூராய்வு முடிக்கப்பட்டது.
காவல் துறை வடக்கு மண்டலத் தலைவா், மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் இறந்தவரின் உறவினா்களிடம் நடந்த சம்பவங்களையெல்லாம் கூறி, மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட விடியோ காட்சிகளையெல்லாம் காண்பித்து விளக்கினா்.
புலன் விசாரணை நியாயமாக நடத்தப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டு இறந்தவரின் உடலை உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.
இந்த வழக்கானது மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் (சிபிசிஐடி) விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது. தங்கமணியைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய காவல் துறையினா் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். சிபிசிஐடி விசாரணை அறிக்கைப்படி, அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.