சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட 66 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதிக்குப் புறம்பாக கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் மீது தமிழ்நாடு நகா் மற்றும ஊரமைப்பு சட்டம் 1971-இன்படி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வாா்டின் உதவிப் பொறியாளா் அல்லது இளநிலைப் பொறியாளா், பகுதி உதவி செயற்பொறியாளா், மண்டல செயற்பொறியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 66 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கட்டட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் அனுமதிக்கு புறம்பாக கட்டுமானம் நடைபெறும் கட்டடங்களின் கட்டுமானப் பணியை, அடித்தள கட்டுமான நிலையிலேயே நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் கட்டுமானத்தில் திருத்தம் மேற்கொள்ளாத கட்டடங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்படுகிறது. இதன்படி, கடந்த 15 நாள்களில் மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட கள ஆய்வில் அனுமதிக்குப் புறம்பாக கட்டுமானம் நடைபெற்ற 467 கட்டடங்களின் பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 66 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.