முகப்பு
தமிழ்நாடு

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Updated On : 17 மே 2022, 12:16 pm IST
பகிர்:

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாயும் தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் ராட்சத கல் சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகிய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதனிடையே இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதில், நான்காவதாக சடலமாக மீட்கப்பட்ட முருகன் என்பவர் மீட்கப்பட்டார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.  

Advertisement

இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தமிழ்நாடு அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாயும் தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராம அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.5.2022 அன்று திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இவ்விபத்தில் அரியகுளம் கிராமம், ஆயர்குளத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் முருகன் (வயது 23) மற்றும் நான்குநேரி, இளையார்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.