திருப்பத்தூர் மாவட்டம், வக்கீல் ஐயர் தோப்பு கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் குனிச்சி அடுத்த வக்கீல் ஐயர் தோப்பு பகுதியில் பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்றன. இதில், 200க்கும் மேற்பட்ட காளைகள் உரிய பாதுகாப்பு வசதியுடன் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் கலந்துகொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திரம் மாநில சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் ஊர்பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட தொலைவை குறைந்த நொடியில் சீறிப்பாய்ந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.55 ஆயிரம் என சுமார் 51 பரிசுகள் காளைகளுக்கு வழங்கப்பட்டன.