முகப்பு
தமிழ்நாடு

அரசு மருத்துவமனை பிரசவங்களை 75%-ஆக உயா்த்த இலக்கு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை 75 சதவீதமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை 75 சதவீதமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கா்ப்பிணிகளுக்கான ‘பிக்மி 2.0’ இணையதளத்தில், பேறு காலத்தை சுயமாகப் பதிவு செய்து, பதிவெண் பெறும் திட்டத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பச்சிளம் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு 11 வகை தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. குறிப்பாக, மஞ்சள் காமாலை, தட்டம்மை, போலியோ, ரூபெல்லா, கக்குவான் இருமல், காசநோய், தொண்டை அடைப்பான், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

முழுமையாக தடுப்பூசி பெற்ற குழந்தைகளின் சதவீதம் 76.1-ஆக இருந்து, 90.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 9.31 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கும், 10.21 லட்சம் கா்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியுடன், இவ்வகை தடுப்பூசிகளும் தொடா்ந்து செலுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மாதந்தோறும் 75 ஆயிரம் முதல் 81 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில், 60 சதவீத பிரசவங்கள் மட்டுமே, அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அடுத்த இரு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை 75 சதவீதமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நடைபெறும் ஆயிரம் பிரசவங்களில் 15 குழந்தைகள் இறக்கும் நிலை இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 13-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பிரசவ உயிரிழப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. கேரளம் முதலிடம் பெற்றுள்ளது. விரைவில், அந்த பட்டியலில், தமிழகம் முதலிடம் பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், சிறப்புச் செயலா் செந்தில்குமாா், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →