முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் 129 இடங்கள் நிரம்பின!

கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான மொத்தமுள்ள 150 இடங்களில் 129 இடங்கள் நிரம்பியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான மொத்தமுள்ள 150 இடங்களில் 129 இடங்கள் நிரம்பியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2021-2022 -ஆம் ஆண்டில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று, முதலாம் ஆண்டு நிறைவு பெறும் நிலையில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

2022- 23 -ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு நிகழ்வாண்டிற்கு ஒப்பளிக்கப்பட்டுள்ள 150 மருத்துவ மாணவர்களுக்கான இடங்களில் தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீடான 10 இடங்களில் 10 மாணவிகள் முழுமையாக சேர்ந்துவிட்டனர். நவம்பர் 4- ஆம் தேதி நிலவரப்படி அரசுக்கான 118 இடங்களில் 115 இடங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள  மூன்று இடங்கள் மட்டுமே வெற்றிடமாக உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 22 இடங்களில்  4 மாணவ, மாணவியர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இவற்றில் வெற்றிடங்களாக உள்ள 18 இடங்கள் இரண்டாவது சுற்று சேர்க்கையில் நிரப்பப்படும்.

மொத்தம்150 இடங்களில் 129 மாணவ - மாணவியர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது 21 இடங்கள் மட்டும் வெற்றிடமாக உள்ளன. இவை அனைத்தும் நவம்பர் 14-ஆம் தேதிக்குள்  நிரப்பிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் கீழ்கண்ட .மருத்துவம் தொழில்நுட்ப பணியிடங்கள் தமிழக அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆய்வுக் கூட நட்புனர் இராண்டாண்டு பட்டய படிப்பிற்காக 25 இடங்கள்,  மயக்கவியல் தொழில் நுட்ப ஒராண்டு சான்றிதழ் படிப்பிற்காக 10 இடங்கள், அறுவை அரங்க தொழில் நுட்ப ஒராண்டு சான்றிதழ் படிப்பிற்காக 10 இடங்கள், அவசர சிகிச்சை தொழில் நுட்ப ஒராண்டு சான்றிதழ் படிப்பிற்காக 10 இடங்கள். E.C.G / Tread Mill தொழில் நுட்ப ஒராண்டு சான்றிதழ் படிப்பிற்காக 10 இடங்கள், டையாலைசிஸ் தொழில் நுட்ப ஒராண்டு சான்றிதழ் படிப்பிற்காக 10 இடங்கள், எலும்பு முறிவு கட்டு தொழில் நுட்ப ஒராண்டு சான்றிதழ் படிப்பிற்காக 10 இடங்கள் என மொத்தம் 85 பட்டய மற்றும் சான்றிதழ் படிப்பிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை 2022- 23 ஆண்டிற்கு மாநில அளவிலான கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →