செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்த வடகிழக்கு பருவமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி மொத்த ஏரியின் கொள்ளளவு தற்போது 2862/3645 மில்லியன் கன அடியாக உள்ளது
ஏரியின் நீர்மட்டம் 21.03/24 அடியை எட்டியதால் ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்மரம்பாக்கம் 5 கண் மதகு கொண்ட 2 மற்றும் 3- வது ஷட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த நீரின் அளவை 100 கன அடியில் இருந்து இன்று 500 கன அடியாக உயர்த்தி நீர்வளத்துறை அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய், அடையாறு ஆற்றின்கரையோரம் உள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
வடகிழக்கு பருவமழை செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நேற்று இரவு முதல் தற்போது வரை சற்று ஓய்ந்திருந்தாலும் தொடர்ந்து வரும் நாட்களில் அதிக மழை வரும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகமாகக் கூடும். நீர்மட்டம் மேலும் உயரும்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை 500 கன அடியாக உயர்த்தி உள்ளதாகவும் 24 மணி நேரமும் செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணித்து வருவதாகவும் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதாலும் அடையாறு ஆற்றை தூர்வாரி, கரையை பலப்படுத்தி, 10 மீட்டர் அளவுக்கு அடையாறு ஆற்றை அகலப்படுத்தி உள்ளதாலும் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை உயர்த்தினால்கூட பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்