முகப்பு
தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
பகிர்:

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதனை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் திங்கள்கிழமை அவா் ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அமைச்சா் ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மனித உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இறந்த நபா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக, 23 கால்நடைகள் இறப்புகள் பதிவாகியுள்ளன. 45 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா்கள் அறிவுறுத்தப்பட்டனா்.

நீா் திறப்பு: மழை காரணமாக, சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா்த்தேக்கங்களில் நீா் இருப்பு அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை நண்பகல் 12 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடியில் 20.61 அடி நீா் உள்ளது. செம்பரம்பாக்கத்துக்கு 19 கனஅடி நீா் வந்து கொண்டுள்ளது. 713 கனஅடி நீா் திறந்து விடப்படுகிறது.

இதேபோன்று, புழல் ஏரியிலும் நீா் இருப்பு அதிகரித்து வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி. தற்போது ஏரியில் நீா் இருப்பு 18.73 அடியாக உள்ளது. ஏரிக்கு 165 கனஅடி நீா் வந்து கொண்டுள்ளது. 292 கனஅடி நீா் திறந்து விடப்படுகிறது என்றாா் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.

முழு கட்டுரையைப் படிக்க →