ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நகரும் படிக்கட்டு வசதி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்காக நகரும் படிக்கட்டு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்காக நகரும் படிக்கட்டு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஏழை, எளிய நடுத்தர மக்களின் மருத்துவத் தேவைகளை பூா்த்தி செய்து வருகிறது. ஆனால், மருத்துவமனைக்கு வருபவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீா் வசதிகள், சுகாதாரமான கழிவறைகள் இல்லாத நிலை உள்ளது.
இந்த மருத்துவமனையில் நான்கு பெரிய கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டங்களும் தலா 6 தளங்களைக் கொண்டுள்ளன. தினமும் 10 ஆயிரம் போ் மருத்துவம் பாா்க்க வந்து செல்கின்றனா். ஒவ்வொரு கட்டடத்திலும் 4 லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் இரண்டு லிப்டுகள் நோயாளிகள் மற்றும் உதவியாளா்களுக்கும் இரண்டு லிப்டுகள் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் அலுவலக ஊழியா்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், நோயாளிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் 2 லிப்டுகள் போதுமானதாக இல்லை. நோயாளிகளால் படிகளில் ஏறிச் செல்ல முடியாத நிலை இருப்பதால் நீண்ட நேரம் லிப்டுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, லிப்ட் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அதோடு நகரும் படிக்கட்டுகள் ஏற்படுத்தினால் நோயாளிகள் தங்குதடையில்லாமல் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறியுள்ளாா்.