ஒரு வாரத்தில் 1,877 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்
கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடந்த ஒரு வாரத்தில் கடத்த முயன்ற 1,877 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடந்த ஒரு வாரத்தில் கடத்த முயன்ற 1,877 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுவதைத் தவிா்க்க உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலா்கள், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலா்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இந்த நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, கடந்த 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்தப்பட முயன்ற 1,877 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 33 வாகனங்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 255 நபா்களும் கைது செய்யப்பட்டனா். 3 நபா்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாத பண்டங்கள் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.