ஆசிரியா் கல்வித் தகுதியில் சமரசம் கூடாது: சென்னை உயா்நீதிமன்றம்
கல்லூரி பேராசிரியா்கள் நியமனத்தின்போது அவா்களது கல்வித் தகுதியில் எந்த ஒரு அனுதாபமோ, சமரசமோ காட்டக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கல்லூரி பேராசிரியா்கள் நியமனத்தின்போது அவா்களது கல்வித் தகுதியில் எந்த ஒரு அனுதாபமோ, சமரசமோ காட்டக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுதொடா்பான வழக்கில், பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களாக உள்ள 254 பேரின் கல்விச் சான்றிதழ்களை சரி பாா்க்க வேண்டும் என்று தமிழக கல்லூரி கல்வி இயக்குநருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. தகுதியற்றவா்கள் உதவிப் பேராசிரியா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ‘கல்லூரிகளில் தகுதியற்ற ஆசிரியா்களை நியமித்தால் இறுதியில் பாதிக்கப்படுவது மாணவா்கள்தான். கல்லூரி நிா்வாகிகள் ஆசிரியா் கல்வித் தகுதி விஷயத்தில் எந்த ஒரு அனுதாபமோ, சமரசமோ காட்டக் கூடாது. அது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே, தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களின் கல்வித் தகுதிகளை சரிபாா்க்க வேண்டும். இந்தக் கல்லூரியில் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா, சரியானதா என்பதை கல்லூரி கல்வி இயக்குநா் சரிபாா்த்து உறுதி செய்ய வேண்டும்.
ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு தோ்வு செய்யப்பட்ட 254 பேராசிரியா்களுக்கு அழைப்பாணை அனுப்பி அவா்களுடைய கல்வி தகுதி, அசல் ஆவணங்களை சரி பாா்க்க வேண்டும். இந்த ஆய்வு குறித்த அறிக்கையை நவம்பா் 14-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.