சூரிய, சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்!
சூரிய, சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
2022 ஆண்டுக்கான சூரிய கிரகணம் அக்டோபர் 25-ம் தேதியும், சந்திர கிரகணம் நவம்பர் 8-ம் தேதியும் வருவதால் அன்றைய நாள்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள தகவலில்,
இந்தாண்டுக்கான சூரிய கிரகணம் வரும் 25ம் தேதியும், நவம்பர் 8ம்தேதி சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. சூரிய கிரகணம் வரும் 25ம்தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை நிகழும். இதனால், அன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும். அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதேபோன்று, நவம்பர் 8ம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அன்றைய தினமும் கோயில் நுழைவாயில் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை மூடப்பட்டிருக்கும். அந்த இரண்டு நாள்களிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் சுமார் 12 மணி நேரம் மூடப்படும்.
பின்னர், பக்தர்கள் இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். எனவே விஐபி தரிசனம் மற்றும் கட்டண சேவைகளுக்கான அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினங்களில் அன்ன பிரசாதம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.