முகப்பு
தமிழ்நாடு

500 கிராமியக் கலைஞா்களுக்கு நிதியுதவி முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

 தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிந்த 500 கிராமியக் கலைஞா்கள் ஆடை ஆபரணங்கள் வாங்க ஏதுவாக நிதியுதவியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

 தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிந்த 500 கிராமியக் கலைஞா்கள் ஆடை ஆபரணங்கள் வாங்க ஏதுவாக நிதியுதவியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொருளாதாரத்தில் நலிந்த கலைஞா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலமாக பொற்கிழித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொற்கிழித் தொகை ரூ.1 லட்சமாக உயா்த்தி 10 கலைஞா்களுக்கு வழங்குவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, கலைமாமணி விருதாளா்களில் 9 பேருக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன. கோவை நடராஜன், சாந்தி கணேஷ், எம்.யு.பிரேம்குமாா், நா.கருமுத்து தியாகராஜன், பிரசாத் வி.சி.ராஜேந்திரன், ஆ.லட்சுமி, என்.ஜி.கணேசன், என்.வேலவன் சங்கீதா, வை.ராஜநிதி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

500 கலைஞா்கள்: தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞா்கள் ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 500 கலைஞா்கள் இதன்மூலம் பயன்பெற்று வருகின்றனா். அதன்படி, நிகழாண்டிலும் இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அதன்

அடையாளமாக 10 கிராயமிக் கலைஞா்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை அளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவா் வாகை சந்திரசேகா், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.