சேலம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் சேலம் அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டு பின்னர் சென்னை, கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் சேலம் அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டு பின்னர் சென்னை, கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அழகிரிநாதன். இவரது மகன் பிரசாத் (35). இன்ஜினியரான இவர் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நேற்று அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று வாலிபர் பிரசாத் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து அவர்களிடம்
எடுத்துரைத்தனர். இதையடுத்து மகனின் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் முன்வந்தனர். உடல் உறுப்புகளை தேவைப்படும் நபர்களுக்கு வழங்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்தனர். மேலும், தமிழ்நாடு உடல் உறுப்பு ஆணையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், கண் ஆகியவற்றை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த உடல்உறுப்புகளை எடுத்துச் செல்ல அந்தந்த மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக் குழு சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அதன்படி, சேலம் அரசு மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகமும், கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகமும், தனியார் மருத்துவமனைக்கு கல்லீரலும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இதயம், நுரையீரலும் மருத்துவக்குழுவிடம் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு உடனடியாக சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், ஆர்எம்ஓ சம்பத் குமார், துறை தலைவர்கள் ஆகியோர் பாராட்டினர்.