முகப்பு
தினமணி கதிர்

'தோபி ஜி'

சமையல் வேலையானது சிரமம் அல்ல; ஆனால், சமையலுக்குப் பின்னர் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்வது மிகச் சிரமம்.

Updated On : 15 மார்ச், 2026 at 3:52 PM
பகிர்:

சமையல் வேலையானது சிரமம் அல்ல; ஆனால், சமையலுக்குப் பின்னர் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்வது மிகச் சிரமம். அதுபோல, துவைத்துத் தேய்த்த உடை உடுத்தி அழகாக வருவது எளிது. ஆனால், அழுக்கான உடைகளைத் துவைத்து உலர்த்தி, சலவை செய்வது என்பது அனைவருக்கும் கடினம்தான். குடும்பத்தினருக்கே இப்படியென்றால், விடுதிகளில் தங்கியிருக்கும் இளையதலைமுறையினருக்கு எவ்வளவு பெரிய சுமை. அவர்களுக்குத் துவைக்கும் வேலை விடுமுறை நாள்களை விழுங்கிவிடும். இவர்களுக்காக, சலவைச் சுமையிலிருந்து விடுதலை தருகிறது 'தோபி ஜி' நிறுவனம்.

சென்னை வளசரவாக்கத்தைத் தலைமையிடமாகக் கொண்ட 'தோபி ஜி', 'ஸ்டார்ட் அப்' நிறுவனமாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 7,500 மாணவர்களுக்கு சேவை செய்யும் வகையில் விரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அதன் நிறுவனரும், தலைமை நிர்வாக அலுவலருமான ரவி ரஞ்சன் கூறியது:

Advertisement

'தொடக்கத்தில் சலவைச் செயலியை அறிமுகப்படுத்தினோம். எங்கள் சலவை நிலையத்தில் ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வரும்வரையில் பிரச்னை இல்லை. வாடிக்கையாளர்கள் பெருகிவிட தாமதமான விநியோகம், வாடிக்கையாளர்களின் ஆடைகள் மாறிவிடுதல் என புகார்கள் வரத் தொடங்கின. குறையைக் கண்டுபிடித்து சரி செய்தோம்.

விடுதிகளில் வசிப்பவர்களுக்கு உணவுதான் முதல் பிரச்னை என்றால், துணி துவைப்பது இரண்டாவது பிரச்னை. தேர்வுக்குத் தயாராகும் மும்முரத்தில் அடுத்த நாள் அணிய உடையில்லை என்று தெரிந்தபோதுதான் அழுக்கான உடைகளைத் துவைக்கவில்லை என்பது நினைவுக்கு வரும். அத்தருணங்களில் மாணவர்கள் மன அழுத்தத்துக்கும், பதற்றத்துக்கும் ஆளாகின்றனர். இதுபோன்றவர்களிடம் பேசி சிரமங்களை அறிந்து, அதற்கு தீர்வாக 'தோபி ஜி' யை உருவாக்கினோம்.

வங்கிக் கடனுதவியுடன் குடும்பத்தினர், நண்பர்களிடம் கடன் பெற்று 'தோபி ஜி' என்னும் சலவை , உலர் சுத்தம் செய்யும் புதுமை மையத்தை உருவாக்கினோம்.

சம்பிரதாய சலவை முறைகளிலிருந்து விலகி, இயந்திரங்கள் மூலம் சிக்கனமான முறையில் நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் சலவை செய்யத் தீர்மானித்தோம்.

சலவைத் தொழிலாளர்களுக்குப் போதுமான பயிற்சி இல்லை என்பது மட்டுமல்ல; சமூகத்தில் சலவைக்காரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத உண்மையையும் தெரிந்து கொண்டோம்.

அனுபவம் இல்லாததால், தொடக்கத்தில் பல தவறுகளைத் தவிர்க்க முடியவில்லை. அதனால், தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்திக்க வேண்டிவந்தது. சலவைத் தொழில் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாத தொழிலாகவே இருந்து வருகிறது.

சலவை வணிகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஒரு பிரச்னைதான். எங்கள் நீர்த் திறனுள்ள இயந்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 570 தண்ணீர்த் தொட்டிகளைக் கையாளும் தண்ணீர் அளவை சேமிக்கின்றன' என்கிறார் ரவி ரஞ்சன்.

'தோபி ஜி'யின் இன்னொரு இணை நிறுவனர் விதுஷா மணிமாறன்:

தொடக்கத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்த நான், தலைமைப் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளேன். ஒரு நாளில் சுமார் ஒரு டன் துணிகளை சலவை செய்கிறோம். 'தோபி ஜி'யை ஆசியாவின் முதல் சலவை, உலர் சுத்தம் செய்யும் புதுமை மையமாக தரம் உயர்த்தியுள்ளோம். மாணவர்கள் தங்கள் ஆடைகளைச் சலவை செய்வதில் நேரத்தை வீணாக்காமல், படிப்பில் கவனம் செலுத்த 'தோ பி ஜி' உதவுகிறது.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் திட்டத்துடன் 'தோ பி ஜி' இணைந்து சலவைத் தொழிலாளர்களை நவீன சலவைத் தொழிலாளர்களாக மாற முறையான சலவைப் பயிற்சியை வழங்கி வருகிறது. இணையத்தில் பதிவு செய்தால், அழுக்குத் துணிகளை நேரில் சென்று பெற்று சலவை செய்து தேய்த்து நாங்களே விநியோகிக்கிறோம். அவசரம் என்றால் நான்கு மணிநேரத்தில் சலவை செய்து அளிக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.