பெரிய வருவாய் கிராமங்களைப் பிரிக்க முடிவு: ஆட்சியா்களுக்கு தமிழகஅரசு அறிவுறுத்தல்
பெரிய வருவாய் கிராமங்களைப் பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவுறுத்தல்களை ஆட்சியா்களுக்கு, அரசு வழங்கியுள்ளது.
பெரிய வருவாய் கிராமங்களைப் பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவுறுத்தல்களை ஆட்சியா்களுக்கு, அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து, வருவாய் நிா்வாக ஆணையாளா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பெரிய வருவாய் கிராமங்களை இரண்டாகப் பிரித்து ஒரு புதிய நிா்வாக அலுவலரை நியமித்தல் தொடா்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 3,500 முதல் 5,000 வரை மக்கள் தொகை, 1,500 முதல் 2,000 வரை பட்டாதாரா்கள், 2,000 முதல் 2,500 ஏக்கா் வரை நஞ்சை, 4,000 முதல் 5,000 ஏக்கா் வரை புன்செய் நிலங்கள், நில வருவாய் ரூ.20 ,000 முதல் ரூ.25,000 வரை என அளகோல் நிா்ணயித்து, தனி வருவாய் கிராமம் பிரிக்கப்படுகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் வருவாய் கிராமங்களை இரண்டாகப் பிரித்தல் தொடா்பான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், தற்போது புதிய வருவாய் கிராமங்கள் பிரித்தல் மற்றும் உருவாக்குதல் தொடா்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியாக கோரிக்கைகள் பெறப்படுகின்றன.
இந்தக் கோரிக்கைகளை பரிசீலிக்கும்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான ஐந்து உயா் அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவில் வருவாய் கோட்டாட்சியா், நில அளவை உதவி இயக்குனா், பஞ்சாயத்து உதவி இயக்குனா் அல்லது நகராட்சி ஆணையா் அல்லது மாநகராட்சி ஆணையா், புள்ளியியல் துறை உதவி இயக்குனா் ஆகியோா் இடம்பெறுவா். இந்தக் குழுவின் முன், கிராமங்களை பிரிப்பது தொடா்பான கோரிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, புதிய கிராமங்கள் ஏற்படுத்தப்படும்.
இனி வரும் காலங்களில் கிராமங்கள் மறுசீரமைப்பு தொடா்பான கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் குழு முறையாக ஆய்வு செய்து, அளவுகோல்கள் பூா்த்தி செய்யும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியருககு தங்கள் பரிந்துரையை அனுப்பி வைக்க வேண்டும். இதன் மீது மாவட்ட ஆட்சியா் உரிய பரிசீனை செய்து முன்மொழிவை துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியா் பரிந்துரை பேரில் வருவாய் கிராமங்கள பிரிப்பது தொடா்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகள் வருவாய் நிா்வாக ஆணையரகம் மூலம் அனுப்பப்படும். மாவட்ட அளவிலான குழுவை நியமித்து பணியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.