முகப்பு
தமிழ்நாடு

அரசு காலிப் பணியிடங்களை ரத்து செய்ய குழு: அன்புமணி கண்டனம்

அரசு காலிப் பணியிடங்களை ரத்து செய்வதற்காக குழு ஒன்றை அரசு அமைக்க உள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

அரசு காலிப் பணியிடங்களை ரத்து செய்வதற்காக குழு ஒன்றை அரசு அமைக்க உள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசுத் துறைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களையும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிக பணியிடங்களையும் ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைக்க அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு பணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், இது பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும்.

ஒரு பணியை 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பாமலேயே, அந்த பணியிடம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்றால், அத்தகைய பணியிடங்களை இனியும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் நிதித்துறையின் பாா்வை ஆகும். அதேபோல், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் உருவாக்கப்பட்ட தற்காலிக பணியிடங்கள், அக்காலத்துக்குப் பிறகு தொடர வேண்டிய அவசியமில்லை என்ற அரசின் பாா்வையும் முழுக்க முழுக்க தவறானது ஆகும்.

திமுகவின் தோ்தல் அறிக்கையில், அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை அரசுத்துறைகளில் ஒரு பணியிடம் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை; இத்தகைய சூழலில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை ஒழிக்க நினைப்பது நியாயமல்ல. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.