முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மிகப்பெரிய அணைகளைக் கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை: துரைமுருகன்

தமிழகத்தில் மிகப்பெரிய அணைகளைக் கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தமிழகத்தில் மிகப்பெரிய அணைகளைக் கட்ட சாத்தியக் கூறுகள் இல்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 10 பள்ளிகளைச் சேர்ந்த 1968 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 'மாணவர்களின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு உதவிகளை தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் ஒரு திட்டம்தான் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்.

எனவே, மாணவர்கள் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்தி உயர்கல்வி பயில வேண்டும்' எனக் கூறினார்.

மேலும், ஆட்சிகள் மாறினாலும் பள்ளி மாணவர்களுக்காக கொண்டு வரப்படும் திட்டங்கள் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வேளாண்மை செழிக்கும் வகையிலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு அணைக்கட்டு பகுதியில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அணைக்கட்டு பகுதியில் புதிய தொழில் பேட்டை ஒன்றும் அரசுக் கல்லூரியும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படுவதாக கூறப்பட்டுள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அணை கட்டப்படாமல் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். மேட்டூர் உபரி நீர் திட்டம் தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

தமிழகத்தில் மிகப்பெரிய புதிய அணைகள் கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை.
அதற்கான இட வசதியோ நீர்வரத்தோ இல்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.