300 பெண்களை ஆபாசமாக படமெடுத்த இயக்குநர்: சேலத்தில் கைது
சேலத்தில் 300-க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக படமெடுத்த இயக்குநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் 300-க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக படமெடுத்த இயக்குநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டடத்தில் இயங்கிய சினிமா கம்பெனியில் இளம்பெண்களை நடிகையாக்குவதாக கூறி ஆபாசப் படங்கள் விடியோக்கள் எடுத்ததாக சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த இயக்குநர் வேல்சத்ரியன் (38), அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகியோரை சூரமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த சினிமா கம்பெனியில் காவல்துறை நடத்திய சோதனையில் அதிர்ச்சி தரும் வகையில் 30-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், கணினி, லேப்டாப், கேமரா, பென்டிரைவ் உள்ளிட்டவை சிக்கியது.
இயக்குநரின் ஹார்டு டிஸ்குகளில் 300-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதாகவும், அப்பெண்களை மோசமாக படமெடுத்து சீரழித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்து வருகின்றனர்.
இதனிடையே வேல்சத்ரியனிடம் 150 ஆண்கள், 250 இளம்பெண்கள் என 400 பேர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு பயோ டேட்டா கொடுத்துள்ளனர். அதனை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
இதில் சிலரிடம் தனது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தலா ரூ.30 ஆயிரம் வரையில் வேல்சத்ரியன் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பயோடேட்டா கொடுத்தவர்களிடம் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கேமராவில் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஹார்டுடிஸ்க்கில் சில பெண்களின் அரை நிர்வாண படங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. படத்தில் உள்ள பெண்களை கண்டறிந்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க | பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்!
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நேற்று வரவழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், ஹார்டு டிஸ்க்குகளில் இருந்த படங்கள் எதுவும் அளிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அழிக்கப்பட்டால் அந்த பதிவுகளை மீண்டும் எடுக்கமுடியுமா என ஆய்வுக்காக சைபர் கிரைம் பிரிவிற்கு அனுப்ப உள்ளனர்.
இதனிடையே பெண்களை தொலைபேசியில் பேசி மயக்கும் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
மேலும் நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண்ணை நடிக்க பழகுவது குறித்த ஆபாசமான வார்த்தைகளை அந்த பெண்ணின் தாயிடமே சொல்லி அனுமதி கேட்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.