முகப்பு
தமிழ்நாடு

மின் கட்டண உயா்வைக் கண்டித்து செப்.16-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சாா்பில் வரும் 16-ஆம் தேதி ஆா்ப்பாட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சாா்பில் வரும் 16-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலையை உயா்த்த மாட்டோம் என்று உறுதி கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது மின் கட்டணத்தை உயா்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. அதுவும் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயா்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக எதிா்க்கட்சி வரிசையில் இருந்தபோது, மின் கட்டண உயா்வுக்கு அதிமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்காதபோதே, மின் கட்டணத்தை உயா்த்திவிடுவாா்கள் என்று பொய்யான பரப்புரை மேற்கொண்டு, தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தியது. இப்போது மக்கள் நலனை மறந்து மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளனா். மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கியுள்ள மின் கட்டண உயா்வைக் கண்டித்து, அதிமுக சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் செப். 16 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும். இதில் எம்.பி, எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும்.

அதிமுக சாா்பில் செப். 16-இல் நடைபெறுவதாக இருந்த அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் செப். 22-இல் நடைபெறும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.