‘சொத்து வரி, மின் கட்டணம்; அடுத்தடுத்து மக்களை வஞ்சிக்கும் திமுக அரசு‘: இபிஎஸ்
சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்து மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம்: சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்து மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது: பேசுகையில்:
சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 16ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
562 கோடியில் 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக அரசு இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்றி இருந்தால் வீணாக கலக்கும் தண்ணீரை ஏரியில் நிரப்பி இருக்கலாம்.
திமுக அரசின் அலட்சியத்தால் இத்திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது வேதனைக்குரியது.
நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை தர்மம் வென்று உள்ளது. விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும்.
புகழேந்தி அதிமுக உறுப்பினர் அல்ல. ஏற்கெனவே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து அதிமுகவில் இணைந்த அவரை ஊடகத்தினர் மட்டுமே மிகைப்படுத்திய காட்டுகிறது.
கரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மின் சுமையை திமுக அரசு சுமத்தி உள்ளது. சொத்து வரி மின் கட்டண உயர்வு என அடுத்தடுத்து மக்களை திமுக அரசு வஞ்சிக்கிறது.
2026 ஆம் ஆண்டு இன்னும் கூடுதலாக 18 சதவிகிதம் வரை மின் கட்டணம் உயரும் வாய்ப்பு. தற்போது சொத்து வரியை 100 சதவிகிதமாகவும் கடைகளுக்கு 150 சதவிகிதமாகவும் வரியை திமுக அரசு உயர்த்தி உள்ளது.
கடந்த 15 மாத கால ஆட்சியில் திமுக அரசு சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது? கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணிகளை மட்டுமே முதலமைச்சர் திறந்து வைத்து வருகிறார். அதையும் முழுமையாக செய்வதில்லை.
அதிமுகவில் யாரை சேர்க்க வேண்டும் சேர்க்கக் கூடாது என்பது பொதுக் குழு முடிவு செய்யும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டது. அதிமுக ஆட்சியில் எந்த தடங்கலும் இல்லாமல் அரசு அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது என கூறினார்.