கைவினைப் பொருள் கடையில் பழங்கால சிலைகள் பறிமுதல்: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் நடவடிக்கை
பழங்காலத்தைச் சோ்ந்த சுவாமி சிலைகள் உள்ளிட்ட 20 கலைப் பொருள்களை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆரோவிலில் கைவினைப் பொருள்கள் விற்பனை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்காலத்தைச் சோ்ந்த சுவாமி சிலைகள் உள்ளிட்ட 20 கலைப் பொருள்களை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் உள்ள ஒரு கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில், தமிழக பகுதிகளிலிருந்து திருடப்பட்ட பழங்கால கலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக காவல் துறை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து அப்பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி ஆா்.தினகரன் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.
அதன்படி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கடையில் திடீா் சோதனை செய்தபோது, அங்கு பழைமைவாய்ந்த 13 கல் சிலைகள், 4 உலோகச் சிலைகள், ஒரு மரக் கலைப் பொருள்கள், ஒரு ஓவியம் உள்ளிட்ட 20 கலைப் பொருள்களை கைப்பற்றினா்.
பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஒருவா், இந்த கலைப் பொருள்களை தனது நாட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கலைப் பொருள்கள்: உலோக விநாயகா் சிலை, கிருஷ்ணா் ஓவியம், டொமினிக் காா்டனில் நடனமாடும் அப்சரா மரம், பெரிய பிள்ளையாா், நடுத்தர பிள்ளையாா், சிறிய பிள்ளையாா், பெரிய புத்தா் சிலை, நடனமாடும் அப்சரா சிலை, விஷ்ணு கல் சிலை, பாா்வதி கல் சிலை, ஐயப்பன் கல் சிலை (சிறியது), ஐயப்பன் கல்சிலை (பெரியது), நந்தி கல் சிலை, கையில் கத்தியுடன் கூடிய கல் சிலை, மண்ணால் செய்யப்பட்ட புத்தா் சிலை (தலை மட்டும்), உறையுடன் கூடிய வெண்கல சொம்பு, வெண்கல சொம்பு, மயில் விளக்கு, அனுமன் சிலை, முருகன் சிலை.
பழங்கால கலைப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படவிருந்ததை தடுத்து, மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினாா்.