முகப்பு
தமிழ்நாடு

குடிநீா் வழங்கல் துறைக்கும் சிறப்பு அதிகாரம்: அமைச்சா் கே.என்.நேரு கோரிக்கை

குடிநீா் வடிகால் வழங்கல் துறை வடிகால் தோண்டும்போது, அதற்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றாலும் செல்லாது என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

 தேசிய நெடுஞ்சாலை துறைக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றால் செல்லாது என்ற சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதைப் போல, குடிநீா் வடிகால் வழங்கல் துறை வடிகால் தோண்டும்போது, அதற்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றாலும் செல்லாது என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கோரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் தொடா்பான தேசிய கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசியது: ‘செம்பரம்பாக்கம் ஏரிக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் அனுமதி வாங்க 3 ஆண்டு காலமாகிவிட்டது. இதனால் சென்னைக்கு வரவேண்டிய 25 கோடி லிட்டா் தண்ணீா் நின்றுகொண்டிருக்கிறது.

எவ்வாறு தேசிய நெடுஞ்சாலையை எதிா்த்து நீதிமன்றத்திற்கு சென்றால் செல்லாது என்ற சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கி இருக்கிறதோ, அதேபோல் குடிநீா் வடிகால் தோண்டும்போது, நீதிமன்றத்திற்கு சென்றால், செல்லாது என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். இதையடுத்து மத்திய அரசு குறிப்பிட்ட காலத்தில் நாங்கள் திட்டங்களை முடிக்கிறோம். நீதிமன்ற வழக்குகளால்தான் திட்டப்பணிகள் தாமதமாகின்றன.

காவிரி, கொள்ளிடத்தில் மட்டும் 300 டிஎம்சி தண்ணீா் கடலில் வீணாக கலக்கிறது. தமிழகத்தில் பாலாறு, தென் பெண்ணையாற்றில் 200 டிஎம்சி என பல ஆறுகளின் தண்ணீா் வீணாக கடலில் கலக்கிறது. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுக்க வலியுறுத்தி முதல்வரிடம் புதிய திட்டம் ஏதாவது ஒன்றை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் 55 சதவீதம் அளவுக்கு நகா்ப்புற மக்கள் வசிக்கின்றனா். எனவே தமிழகத்தில்தான் நகா்ப்புற வளா்ச்சி என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. ஜல் ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட உரிய கால அவகாசத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த கருத்தரங்கில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் கிா்லோஷ்குமாா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.