முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
விராலிமலை அருகே இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் மதுரையில் சி. விஜயபாஸ்கரின் நண்பர் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
250 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை இயங்கி வருவதாக தவறான தகவல் அளிக்கப்பட்டநிலையில், வேல்ஸ் அறிவியல் மைய நிர்வாகத்துக்கு விஜயபாஸ்கர் உதவியுள்ளார் என்று குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டை, மஞ்சாங்கரையில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க, விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, தேசிய மருத்துவக் குழுமத்தின் விதிகளுக்கு முரணாக 2020ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் அறிவியல் மையம் முழுமையாக 250 படுக்கைகளுடன் முழுமையான மருத்துவமனையாக இயங்குவதாக தவறான தகவல்அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 300 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்குத்தான் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற விதிமுறையும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மருத்துவமனை செயல்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளதும், முறைகேடு நடந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.