காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா குடிலும் அவரது சிலையும் சிதிலமடைந்து கிடக்கும் நிலையில் அவற்றை அரசு பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் முன்னாள் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்திற்கு கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழக அரசால் 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் நூலகம், மூலிகைப் பண்ணை, முதியோர் இல்லம் நடத்தி வந்தனர்.
அண்ணா சிலை வைக்கப்பட்டு அண்ணா குடில் என்று அழைக்கப்படும் இந்த இடத்தை அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத்தினரான மலர்வண்ணன், சௌமியா, இளவரசி ஆகியோர் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், குத்தகை காலம் முடிவடைந்ததால் அந்த 7 ஏக்கர் நிலத்தை அதிமுகவினர் அபகரிக்க முயல்வதாகவும் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தி மீண்டும் அண்ணாவின் வாரிசுகளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் தலைமையில் எம்எல்ஏக்கள், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்பின் இந்த பிரச்னை முடிவுற்கு வந்த பின்பு அந்த அண்ணா சிலை வைக்கப்பட்ட குடில் இடம், முற்றிலும் புதர்களால் சூழ்ந்துள்ளது. மேலும், அண்ணாவின் சிலை பராமரிப்பின்றி வண்ணங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றும் தற்போதைய திமுக ஆட்சியில், அவரது சிலையினையும் அவர் நினைவாக வழங்கப்பட்ட இடத்தையும் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.