முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: காவல் நிலையம் முற்றுகை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது தோரமங்கலம். இந்த ஊராட்சியில் உள்ள பொடையன் தெருவில்  இரண்டு அரசு மதுக் கடைகள் திறக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மதுக் கடைகள் தோரமங்கலம் கிராமத்தில் திறக்கக் கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் டாஸ்மாக் கடை திறப்பதற்கான கட்டடப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இன்று காலை ஆண்களும் பெண்களும் சுமார் 100 பேர் ஜலகண்டபுரம் காவல் நிலையம் அருகே கூடி சிறிது நேரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் காவல் உதவி ஆய்வாளரிடம்  தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மதுக்கடையை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் தொடர்ந்து மதுக்கடையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

பள்ளிக் குழந்தைகள் செல்லும் பாதையில் மதுக்கடை அமைத்தால் தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்றும் பெண்கள் தெரிவித்தனர்.

காவல் நிலையம் முற்றுகை காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →