முன்னுரிமை அடிப்படையில் பச்சமலை மக்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு!
முன்னுரிமை அடிப்படையில் பச்சமலை மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படும் என ஆட்சியர் செ.கார்மேகம் உறுதியளித்து பேசினார்.
தம்மம்பட்டி: முன்னுரிமை அடிப்படையில் பச்சமலை மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று பச்சமலை ஊராட்சி ஓடைக்காட்டுப்புதூரில் நடந்த மக்கள் சந்திப்பு முகாமில் சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உறுதியளித்து பேசினார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம் பச்சமலை ஊராட்சி ஓடைக்காட்டுப்புதூரில் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் பேசியதாவது:
பச்சமலை ஊராட்சியில் ஓடைக்காடு, மயிலகுளம், புனவரை, நெய்வாசல், பெரியபக்களம், சின்னபக்களம், நல்லமாத்தி, பழையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள மக்களிடம் கள ஆய்வு மேற்கொண்டு இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் தொடர்புடைய அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இங்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும்.
நகரப்பேருந்துகளில் மகளிர் இலவச பயணத்திட்டம், தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி ஆகிய அனைத்து திட்டங்களும் பச்சமலையில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் பெறப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மனுக்கள் மீதும் அதன் சாத்தியக்கூறுகள், முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியர் செ.கார்மேகம் கூறினார்.
அதனைத்தொடர்ந்து அவர், அனைத்துத்துறைகளின் சார்பில் 358 பயனாளிகளுக்கு ரூ.26.06 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெரிய மங்களம் தொடக்கப் பள்ளி, நெய்வாசல் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளிகளுக்கு சென்ற ஆட்சியர், மாணவர்களுடன் கலந்துரையாடி பாராட்டினார்.
இதையும் படிக்க | ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஓடைக்காட்டுப்புதூர் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் ஆட்சியர் செ.கார்மேகம் ஆய்வுமேற்கொண்டு பள்ளியைத் தூய்மையாக வைத்திருக்கவும், பள்ளி மாணவர்களுக்கு அதிகமான செயல்விளக்கங்களுடன் பாடங்களை கற்பிக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அப்பள்ளியின் மதிய உணவை அருந்தி ஆய்வு செய்து, சத்துணவு பொருள்களின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
மக்கள் சந்திப்பு முகாமில் ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா,வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் புருசோத்தமன், ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் ஜெமினி, ஊராட்சி உதவி இயக்குநர் தமிழரசி, கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலர்கள் மகேந்திரன், ஸ்ரீனிவாஸ், பச்சமலை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கடந்த 50 வருடங்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பச்சமலை பகுதிகளில் ஆட்சியர் முகாமிட்ட ஆய்வு மேற்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.