திருவள்ளூர் அருகே ரயிலில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி
திருவள்ளூர் அருகே புறநகர் ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே புறநகர் ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ரயில்வே காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே திருவாலங்காடு அடுத்த ஓரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் மகன் நீதிதேவன்(19). இவர் சென்னை மாநில கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம்போல் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வேளாச்சேரி-அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் படியில் தொங்கிய படி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, வேப்பம்பட்டு-செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே எதிர்பாரதவிதமாக கால் நழுவி கீழே விழுந்துள்ளார். அதில், கால்கள் சிதைந்த நிலையில் படுகாயமடைந்தார்.
Advertisement
இதையடுத்து அப்பகுதியில் இருந்தோர் மாணவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், ரயிலில் படியில் தொங்கியபடியே பயணித்த மாணவர் விழுந்து உயிரிந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | தமிழ் மொழி, கலாசாரம் நிலையானவை: பிரதமா் மோடி புகழாரம்