முகப்பு
தமிழ்நாடு

பழனி கோயில் நிர்வாகத்தின் பள்ளி, கல்லூரிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

பழனி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும்4 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:51 AM
பகிர்:

பழனி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக 250 க்கும் மேற்பட்ட  திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு,  பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களில் திருப்பணிகள், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலைச் சிற்றுண்டி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

Advertisement

அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு  வரும்  அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும்  அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மற்றும்  பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி,  ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

இப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொலைவில் இருந்து கல்வி பயில வருகை தருவதாலும், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் காலைச் சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல் மற்றும் இட்லி  (அல்லது) ரவா உப்புமா மற்றும் இட்லி (அல்லது) கிச்சடி மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சட்னி, சாம்பார் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதற்கான செலவினம் திருக்கோயிலின் நிதியிலிந்து செலவிடப்படும்.

இந்நிகழ்ச்சியில்,   உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments