முகப்பு
தமிழ்நாடு

வாணியம்பாடியில் தென் கொரிய பெண்ணுடன் திருமணம்!

வாணியம்பாடியில் முனைவர் பட்டம் பெற்ற மணமகனுக்கும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

Updated On : 7 செப்டம்பர், 2022 at 12:06 PM
பகிர்:

வாணியம்பாடியில் முனைவர் பட்டம் பெற்ற மணமகனுக்கும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கோயம்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங் படித்த பின்னர் மேற்படிப்புக்காக தென் கொரியா நாட்டுக்குச் சென்றார். அங்கே அவர் முனைவர் பட்டம் பெற்று தற்போது கொரியாவிலேயே செயல்பட்டு வரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த மூன்று வருடங்களாக தென் கொரியா நாட்டில் உள்ள பூசான் மாகாணத்தைச் சேர்ந்த சேங்வான்முன் என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் இந்திய முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து பெற்றோர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தென் கொரியாவைச் சேர்ந்த சேங்வான்முன்  குடும்பத்தினர் கடந்த வாரம் இந்தியா வந்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், இன்று காலை வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், உறவினர்கள் இந்து முறைப்படி திருமணம் நடத்தி வைத்தனர். திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமகன் மற்றும் மணமகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.