மருத்துவ உபகரணங்களுக்கு பதிவு உரிமம் கட்டாயமாகிறது
அறிவிக்கை செய்யப்படாத மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும் இனி பதிவு உரிமம் கட்டாயம் என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அறிவிக்கை செய்யப்படாத மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும் இனி பதிவு உரிமம் கட்டாயம் என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி நிகழாண்டு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும், பதிவு உரிமம் கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுப்பாட்டு இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒருபுறம் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய இத்தகைய ஒழுங்குமுறை விதிகள் இருந்தாலும், மற்றொரு புறம் மருத்துவ உபகரணங்களுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அவற்றை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பிரிவு சி மற்றும் டி வரையறைக்கு கீழ் உள்ள அறிவிக்கை செய்யப்படாத மருத்துவ உபகரணங்களுக்கு பதிவு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உரிமம் கோரி விண்ணப்பித்தால், நேரடி ஆய்வு மேற்கொண்டு உரிமம் வழங்கப்படும் என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.