முகப்பு
தமிழ்நாடு

சாலையோரத்தில் கேட்பாரற்ற நிலையில் உள்ள வாகனங்கள் ஏலம் : மாநகராட்சி எச்சரிக்கை

மாநகராட்சிப் பகுதியில் நீண்ட காலமாக சாலையோரத்தில் கேட்பாரற்ற நிலையில் நிற்கும் வாகனங்களை 15 நாள்களுக்குள் அகற்றாவிட்டால் ஏலத்தில் விடப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

மாநகராட்சிப் பகுதியில் நீண்ட காலமாக சாலையோரத்தில் கேட்பாரற்ற நிலையில் நிற்கும் வாகனங்களை 15 நாள்களுக்குள் அகற்றாவிட்டால் ஏலத்தில் விடப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருவோரங்கள் மற்றும் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையிலும் கேட்பாரற்ற நிலையில் வாகனங்கள் காணப்படுகின்றன.

மேலும், வாகனம் நிற்கும் பகுதி குப்பை கொட்டும் இடமாக உருவாகி சாலைகளை முறையாக சுத்தம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், நீண்ட நாள்களாக சாலைகள் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2, 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் மாநகராட்சி மற்றும் காவல் துறை அலுவலா்களால் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதுபோல நீண்ட நாள்களாக நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்களை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 நாள்களுக்குள் தாமாக முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும்.

அவ்வாறு அகற்றாதபட்சத்தில் அந்த வாகனங்கள் மீட்கப்பட்டு பொது இடத்தில் வைக்கப்படும். அப்புறப்படுத்தப்பட்ட வாகனங்களின் விவரங்கள் மாநகராட்சி இணையதளத்திலும், செய்தித்தாளிலும் வெளியிடப்படும்.

வாகனங்களின் உரிமையாளா்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலா்களை 15 நாள்களுக்குள் அணுகி உரிய விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு உரிமை கோரப்படாத வாகனங்கள் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு உரிய சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி பொது ஏலத்தில் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.