சென்னை: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வியாழக்கிழமை இரவு தில்லி செல்ல இருந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் ரத்தான நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை தில்லி புறப்பட்டு சென்றார்.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றான, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.
சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் குடியரசுத் தலைவர் கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய திட்டங்களாகப் பார்க்கப்படும் இவற்றுக்கு, குடியரசுத் தலைவரை அழைத்து திறப்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு முறைப்படி அழைப்புவிடுக்க வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் தில்லி செல்வதாக கூறப்பட்ட நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்றைய பயணம் ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்டோரை சந்திப்பதற்காக, இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி புறப்பட்டு சென்றார்.
வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் குடியரசுத் தலைவரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், நீட் விலக்கு மசோதா குறித்து வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.