பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடு திரும்பினார்.
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரிக்கு காரில் சென்று கொண்டிருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தருமபுரியை அடுத்த காரிமங்கலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
சேலத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, அங்கிருந்து கிருஷ்ணகிரியில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா். தருமபுரியை அடுத்த காரிமங்கலம் அருகே சென்ற போது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, காரிமங்கலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை இருந்ததாகவும், அதற்கான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவா் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைப் பெற்ற பிறகு, உயா் மருத்துவப் பரிசோதனைக்காக பெங்களூரில் உள்ள நாராயணா இருதாலயா மருத்துமனைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
அவரை தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோா் வழிஅனுப்பி வைத்தனா். இந்த நிலையில் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வீடு திரும்பினார். அவர் கார் மூலம் சென்னை சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.