அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆக. 28 வரை நீட்டித்த எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜா்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சா் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதைத்தொடா்ந்து, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆக. 12-ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியது. இதைத்தொடா்ந்து அவரது காவலை ஆக. 25-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டாா்.
சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற உத்தரவுப்படி, அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமாா் முன் காணொலி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா். மேலும், அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்த சிறைத்துறையினருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.