திருப்பூர்: காற்றில் சரிந்து விழுந்த பின்னலாடை நிறுவனம்!
திருப்பூரில் தகரக் கொட்டகையில் செயல்பட்டுவந்த பின்னலாடை நிறுவனம் காற்றால் சரிந்து விழுந்தது.
திருப்பூர்: திருப்பூர் கூலிபாளையத்தில் பலத்த காற்றின் காரணமாக தகரக் கொட்டையில் செயல்பட்டு வந்த பின்னலாடை நிறுவனம் செவ்வாய்க்கிழமை மாலையில் சரிந்து விழுந்தது. இதில், 4 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் தகரக் கொட்டகையில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் வடமாநில மற்றும் வெளியூரைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில் பலத்த காற்று மற்றும் ஒருசில இடங்களில் மழையும் பெய்தது.
Advertisement
இதனிடையே, கூலிபாளையம் பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பின்னலாடை நிறுவனத்தின் தகரக் கொட்டகை அடியோடு சரிந்து விழுந்தது. இதில், சுமார் 4 தொழிலாளர்கள் காயமடைந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த ஊத்துக்குளி காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் தேநீர் இடைவேளைக்குச் சென்றதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.