விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்: பிரேமலதா
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரவிய நிலையில், அவரின் மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரவிய நிலையில், அவரின் மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
காய்ச்சலுடன் கூடிய தொடர் இருமல், சளி பாதிப்புக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல் நிலையில், சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாச சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, விஜயகாந்த்தின் உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை வெளியே இன்று தேமுதிக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
Advertisement
இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தளத்தில் விடியோ ஒன்றை சனிக்கிழமை இரவு பகிர்ந்துள்ளார்.
அதில், “விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவிந்ததால், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.