சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் ரூ.5 என்ற கட்டணத்தில் மீண்டும் வரும் 17-ம் தேதி அன்றும் பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு கடந்த டிச. 3 ஆம் தேதி அன்று க்யூஆர் பயணச்சீட்டுகளை (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) பயன்படுத்தி பயணித்த பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்கியது.
இந்நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் கனமழை காரணமாக டிச.3 ஆம் தேதி அன்று மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்க இயலாத காரணத்தினால் மீண்டும் வருகின்ற டிச.17 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் மெட்ரோ பயணிகள் இச்சலுகையை பயன்படுத்தி வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக்கட்டணத்தில் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது.
பயணிகளின் ஒட்டு மொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க: வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.